ஜுலை 20 புரூஸ் லீயின் நினைவு தினம். தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம்.

புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு சினிமாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள் என்பதே சினிமா கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 பிரேம்களாக மாற்றியமைத்தனர்.

1940 நவம்பர் மாதம் 27-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் புரூஸ் லீ பிறந்தார். இவரது தந்தை Lee Hoi - Chuen, ஒரு நடிகர். தாய் Grace ஒரு கத்தோலிகர்.



புரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.

புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை La Salle College-ல் (Secondary School) கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.

1959-ம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ அனுப்பி வைத்தார்.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிலாஸபி பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர் தனது மனைவி Linda Emery-ஐ சந்தித்தார்.

புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது 'Batman' படத்தின் தயாரிப்பாளர் William Dozier பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அவர் அமெரிக்காவில் இருந்தபோது 'The Green Hornet', 'Iron Side', 'Here Come the Brides' ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,'Crawn Colony Cha Cha' சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.

கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே 'பிக் பாஸ்' படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.

இதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது.



புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய 'Way to the Dragon' படம் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆஃப் தி டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக 'Way to the Dragon' படத்தின் கிளைமாக்ஸில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக்நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது.



அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் தி ட்ராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே மிரட்டியது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை 'என்டர் தி ட்ராகன்' ரிலீஸாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது.

கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது. இதனை தத்தவப் பாடத்துடன் சேர்த்து 'ஜே கேடி' எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார்.

புரூஸ் லீ உடம்பை பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது.

புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக் கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம்.

முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர் முன் கோபத்துடன் நடந்து கொண்டது ஏராளமான விரோதிகளை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன் சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்களை பறி கொடுப்பதும் சாதாரணம்.

திரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.



ஒரு கலையை எப்படி நேசிப்பது, அதனை எங்ஙனம் உச்சத்துக்கு கொண்டு செல்வது என்பதை கற்றுக் கொள்ளும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார் புரூஸ் லீ. அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவர் அமர்ந்த நாற்காலி காலியாகவே உள்ளது. அதில் அமரும் தகுதியுள்ள ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்க போவதில்லை!

சச்சினுக்கு தலைமுறையின் சிறந்த வீரர் விருது!

கொல்கத்தா விளையாட்டு செய்தி நிருபர்கள் சங்கம் வழங்கும் இந்த தலைமுறயின் சிறந்த விளையாட்டு வீரர் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.

முன்னாள் இந்திய அணித் தலைவரும் சக வீரருமான சவ்ரவ் கங்கூலியும் நடிகர் தேபஸ்ரீ ராயும் இந்த விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினர்.

விருதை பெற்றுக் கொண்டு பேசிய சச்சின் நன்றி தெரிவித்ததோடு, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுவது என்பது ஒரு தனிச்சிறப்பான உணர்வு என்றார்.

அணியிலிருந்து நீக்கப்பட்டு பிறகு அணிக்குள் தேர்வு செய்யப்பட்டு திறமையை நிருபித்ததற்காக கங்கூலிக்கும் சிறப்பு விருது அளிக்கப்பட்டது.

கொல்கத்தா விளையாட்டுச் செய்தி நிருபர் சங்கம் பேட்மின்டன் வீரர் பிரகாஷ் பதுகோனிற்கு வாழ் நாள் சாதனை விருது கொடுத்து கவுரவித்தது.

இந்திய கிர்க்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மாவிற்கு சிறந்த இளம் வீரர் விருது கிடைத்துள்ளது.

ஷேக்ஸ்பியர் ஒரு பெண்-புதுத் தகவலால் பரபரப்பு


புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற கவிஞர்களில் ஒருவர் ஷேக்ஸ்பியர். அவரது பல படைப்புகள் இன்றளவும் புகழ் பெற்றவை. ஹேம்லட், ஜூலியஸ் சீசர், கிங் லியர், மெகபத், ஆண்டனி அன்ட் கிளியோபாட்ரா, ஓதெல்லோ, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல புகழ் பெற்ற நாடகங்களையும், சொன்னட்ஸ், வீனஸ் அன்ட் அடோனிஸ், தி ரேப் ஆஃப் லுக்ரீஸ், தி பீனிக்ஸ் அன்ட் தி டர்ட்டிள் உள்ளிட்ட பல கவிதைகளையும் வடித்தவர் ஷேக்ஸ்பியர்.

உலகெங்கும் ஷேக்ஸ்பியருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் விரவிக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் ஷேக்ஸ்பியர் குறித்த பரபரப்புத் தகவலை ஜான் ஹட்சன் என்ற ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.

இவரது கூற்றுப்படி ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண். யூத இனத்தைச் சேர்ந்தவர். ஷேக்ஸ்பியரின் உண்மையான பெயர் அமெலியா பஸனோ லேனியர் பஸனோ என்பதாகும். அமெலியா, 1611ம் ஆண்டு முதன் முதலில் எழுதிய கவிதை சால்வே டியூஸ் ரெஸ் ஜூடாரியம் என்பதாகும். ஒரு பெண்ணால் எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்ட உலகின் முதல் கவிதை இதுதான்.

அமெலியா இங்கிலாந்தில் வாழ்ந்தவர். இவரது படைப்புகளும், ஷேக்ஸ்பியரின் படைப்புகளும் ஒரே மாதிரி உள்ளன. மேலும் அமெலியா தனது படைப்புகளில் பயன்படுத்திய வார்த்தைகளும், கவிதை ஆக்கங்களும், ஷேக்ஸ்பியரின் கவிதைகளுடன் மிகவும் பொருந்தி வருகின்றன.

ஷேக்ஸ்பியரின் படைப்புகளையும், அமெலியாவின் படைப்புகளையும் பார்க்கும்போதும், அவர்களது ஸ்டைல் உள்ளிட்டவற்றை பார்க்கும்போதும், ஷேக்ஸ்பியரின் படைப்புகள் உண்மையில் அமெலியாவுடையது என்று கருத வேண்டியுள்ளது.

இது மிகப் பெரிய உண்மை. அமெலியாவின் படைப்புகளை ஷேக்ஸ்பியர் திருடவில்லை. மாறாக, ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் எழுதியவர் அமெலியாதான். அமெலியா வாழ்ந்த காலத்தில் பெண்கள் கவிதை உள்ளிட்டவற்றை படைக்க, வெளியிட அனுமதி கிடையாது. இதனால்தான் தனது படைப்புகள் வெளியுலகை எட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் அமெலியா கவிதைகளை வெளியிட்டுள்ளார்.

அக்காலத்து இங்கிலாந்தில் பெண்கள் இலக்கிய உலகில் நுழையக் கூட அனுமதி கிடையாது. நாடகங்கள் மட்டுமல்ல கவிதை, கதை என எதையும் எழுத அவர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால்தான் ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் அமெலியா தனது படைப்புகளை வடித்துள்ளார்.

அமெலியாவின் திட்டம் என்னவென்றால், வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரிலேயே தனது படைப்புகள் உலகை வலம் வரட்டும். காலத்தின் கோலமாக உண்மை வெளியே வரும்போது தன்னைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்பதுதான் என்கிறார் ஹட்சன்.

ஹட்சன் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து ஏராளமான பட்டங்களைப் பெற்றவர் ஆவார். ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து விரிவான பல ஆய்வுகளை மேற்கொண்டவர். ஹட்சனின் இந்தக் கூற்று இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்லின் மன்றோ - சிதைக்கப்பட்ட அழகிய கனவு!




1950 ஆம் ஆண்டு மர்லின் மன்றோ நடித்த கறுப்பு வெள்ளை திரைப்படத்தின் கால் மணி நேர காட்சியொன்று சமீபத்தில் 1.5 மில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. மர்லின் முகம் தெரியாத ஏதோ நடிகர் ஒருவருடன் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சி அது. FBI-ன் பராமரிப்பில் இருந்த அந்த கால் மணி நேர படத்தை, அதிக விலைகொடுத்து வாங்கிய செல்வந்தர் தன்னை மீடியாவில் வெளிப்படுத்த விரும்பவில்லை. விற்பனை ரகசியமாக நடந்தது.

மர்லின் மன்றோ இறந்து நாற்பத்தைந்து வருடங்கள் கழித்து நடந்திருக்கும் இந்த நிகழ்ச்சி, மர்லின் உயிரோடு இருந்தபோது உலகம் அவரை எவ்வாறு உருவகித்துக் கொண்டது என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது.




1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது. ஒன்றரை மில்லியன் டாலருக்கு கால் மணி நேர படமே இதற்கு சான்று.

மர்லினின் அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும், 36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது.

மர்லின் மன்றோ பிறக்கும்போது அவரது தாயார் கிளாடிஸ் மன்றோ பேக்கர் தனது முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கரை பிரிந்து எட்வர்ட் மார்டின்சன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். மர்லினின் தந்தை யார் என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அப்பாவை தேடிய நீண்ட பயணமாக மர்லினின் வாழ்க்கையை எளிமையாகக் கூறலாம்.

மர்லினின் பிறப்புச் சான்றிதழில் அப்பா என்று எட்வர்ட் மார்டின்சனின் பெயரும், ஞானஸ்தான சடங்கில் அப்பா இடத்தில் ஜாஸ்பர் பேக்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மர்லினின் தாயார் கிளாடிஸ் ஹாலிவுட்டிலுள்ள ஆர்.கே.ஓ. ஸ்டுடியோவல் பணிபுரிந்தபோது, அங்கு ·பிலிம் கட்டராக இருந்த ஸ்டாண்லி கிப்போர்டுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். அதனால் மர்லினின் தந்தை யார் என்ற கேள்விக்கு மூன்றாவது சாய்ஸாக ஸ்டாண்லி கிப்போர்டின் பெயரும் முன்மொழியப்படுகிறது. தவிர வேறு பலரோடும் தொடர்பு இருந்ததால் தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கிளாடிஸாலேயே சொல்ல முடியவில்லை.

அப்பா என்ற உறவு வாழ்க்கையில் ஏற்படுத்திய வெற்றிடம் மர்லினு‌க்கு இறுதிவரை ஒரு அலைக்கழிப்பாக தொடர்ந்தது. அறுபது வயதான ஆர்தர் மில்லரோடு மர்லின் உடல் ரீதியான உறவு வைத்துக் கொண்டிருந்தாலும் அவரை டாடி என்றே அழைத்து வந்ததை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மர்லினின் இளமைப் பருவம் கொடியது. பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்பு பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள். பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு வளர்ப்பு பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை. இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட, அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

16 வயதில் நடந்த மர்லினின் முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை. வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது. 1944-ல் மர்லினின் வாழ்க்கை புதிய மாறுதலுக்குள்ளானது. டேவிட் கொனோவர் என்ற புகைப்படக் கலைஞர் Yank பத்திரிக்கைக்காக மர்லினை சில புகைப்படங்கள் எடுத்தார். மர்லினின் அபிரிதமான அழகை முதலில் கண்டுணர்ந்தவர் கொனோவரே.


ஒரே வருடத்தில், அமெரிக்க முன்னணி பத்திரிக்கைகளின் அட்டைப்பட அழகியாக உயர்ந்தார் மர்லின் மன்றோ. இந்தப் புகழ், வெளிச்சம் மர்லினின் கணவனுக்குப் பிடிக்கவில்லை. கணவனா, வேலையா என்ற கேள்வி வந்தபோது, கணவனை உதறினார் மர்லின். 1942ல் நடந்த 1944ல் கசந்த நினைவுகளுடன் முறிந்துபோனது.





பேஸ்பால் விளையாட்டு வீரர் Joe Di Maggio உடனான இரண்டாவது திருமணமும், ஆர்தர் மில்லர் போன்ற அரை டஜன் நபர்களுடனான மர்லினின் உறவும் மன நிறைவானதாக அமையவில்லை. இந்த காலகட்டத்தில் மதுவும், நோயும் மர்லினை கூறுபோட தொடங்கியிருந்தன. மனநல மருத்துவரின் ஆலோசனைகளையும் மர்லின் கேட்டு வந்தார்.

அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியுடனான மர்லினின் அறிமுகம், அமெரிக்கா முழுவதுமே பதட்டத்தை உருவாக்கியது. ஜான் கென்னடியுடன் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடியுடனும் மர்லின் தொடர்பு வைத்திருந்தார். ஜாதிபதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவர் பாடியது, அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மர்லின் ஒரு உளவாளி. ஜான் கென்னட மூலம் அமெரிக்காவின் ரகசியங்கள் தெரிந்துகொள்கிறார் என்பது போன்ற ஹாஸ்யங்கள் கிளம்பின. அமெரிக்க உளவு நிறுவனங்களின், 'நீக்கப்பட வேண்டியவர்கள்' பட்டியலில் அவர் பெயரும் இணைக்கப்பட்டது.

இறுதியில் 1962 ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது அறையில் இறந்து கிடந்தார் மர்லின். அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளே மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இளமையை ஒரு அனாதையைப் போல் காக்க நேர்ந்த மர்லினின் உடல் சவக்கிடங்கில் அதே அனாதைதனத்துடன் கிடந்தது. அவள் உடலைப் பெற்றுக்கொள்ள கணவனோ, காதலனோ, உறவினர்களோ யாருமில்லை. இருந்த ஒரே உறவான மர்லினின் தாயோ மகளின் மரணத்தை உணர முடியாத மனச்சிதைவுடன் மனநல காப்பாகத்தில் இருந்தாள்.


அழகின், இளமையின், காமத்தின் குறியீடாக மர்லின் இன்று வரை முன்னிறுத்தப்படுகிறாள். மிதமிஞ்சிய காமத்தை வெளிப்படுத்தும் வேடத்தை ஏற்று நடித்த மர்லின் ஒருபோதும் காமத்தை நாடிச் சென்றதில்லை. மாறாக காமுகர்களால் குதறப்பட்ட வாழ்க்கையாக அவளது வாழ்க்கை திகழ்ந்தது. தனது எட்டு வயதில் வயதான ஒருவரால் பாலியல் சித்திரைவதைக்குள்ளானதை வளர்ந்த பிறகும் வடுவான மனதில் தங்கியிருந்ததை நினைவுகூர்ந்துள்ளார் மர்லின். வளர்ப்பு பெற்றோர்களே பல நேரம் அவளை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர்.

திரைப்படத்தில் பிரபலமான பிறகு மர்லின் ஏற்படுத்திக் கொண்ட உறவுகள், அப்பா என்ற உறவின் தேடுதலாகவே அமைந்தது. ஆர்தர் மில்லரை மட்டுமின்றி தனது கணவன் Joe Di Maggio-வையும் மர்லின் டாடி என்றே அழைத்தார்.

மர்லின் சிறந்த பாடகி. லேடீஸ் ஆ·ப் தி கோரஸ் படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார். இது தவிர அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை முப்பதை தொடும். உலகின் தலைசிறந்த நாவலாசிரியர்களை, அவர்களின் படைப்புகளை மர்லின் அறிந்திருந்தார். இந்த பன்முகத்தன்மையை அழித்து, கவர்ச்சி எனும் ஒற்றை பிம்பமாக இந்த சமூகம் அவரை பிரகடனப்படுத்தியது. சுருக்கமாக, மர்லின் வாழ்க்கை சிதைக்கப்பட்ட ஓர் அழகிய கனவு!