தத்துவமேதை காரல் மார்க்ஸ்

ஒரு வழக்குரைஞரின் குடும்பத்தில், 1818 மே 5-ல் பிரஷ்யவின் ரைன் மாநிலத்தில், திரிர் என்ற நகரத்தில் ஹைன்ரிக் மார்க்ஸ் - ஹென்ரிட்டே தம்பதிக்கு மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார்.

இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் காரல் மார்க்ஸூக்கு அப்போது இருந்தனர்.

திரிர் உயர்நிலைப்பள்ளியில் 1830 முல் 1835 வரை மார்க்ஸ் பயின்றார்.

பள்ளி இறுதி வகுப்பில் நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில், ‘என்ன வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள்’ என்று தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது அவருக்கு வயது பதினேழு.

தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும், குறிக்கோளும் என்ன? என்பதை மார்க்ஸ் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் மார்க்ஸ் எந்த திசை வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்போகிறார் என்பதை இந்தக் கட்டுரை அடித்தளமிட்டது.

பதினேழு வயதுச் சிறுவர்களுக்குரிய சிந்தனையிலிருந்து மார்க்ஸின் சிந்தனை முற்றிலும் மாறியிருந்தது.

உயர்நிலைப்பள்ளி படிப்புக்குப் பிறகு மார்க்ஸ் போன் நகரத்திலும், பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்றார். அவர் சட்டவியலைத் தேர்ந்தெடுத்தாலும், தத்துவ ஞானத்தையும், வரலாற்றையும் மிகவும் விரும்பிப் பயின்றார்.

1814-ஏப்ரலில் இயெனா பல்கலைக் கழகத்தில் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்து, தத்துஞானத்தில் டாக்டர் பட்டம பெற்றார்.

பத்திரிக்கைத் துறையை அறிந்து கொள்ள விரும்பிய மார்க்ஸ், ‘ரைன்’ பத்திகையில் 1842-ஏப்ரலில் வேலைக்குச் சேர்ந்தார். அதே வருடம் அக்டோபர் மாதம் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஆனார்.

ஜெர்மனியின் அரசியல் நிலையையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மார்க்ஸ் அறிந்து கொள்ள பத்திரிக்கைப் பணி உதவியது.

சமூக - பொருளாதாரப் பிரச்சினைகளையும், பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடுகளையும் பிரிட்டன், பிரான்சிலிருந்து வெளிவந்த சோஷலிஸ்டு நூல்கள் மார்க்ஸின் சிந்தனைக்கு உரமூட்டின.

பிரஷ்ய அரசாங்கம் ‘ரைன்’ பத்திரிக்கையைத் தடை செய்ய முயன்றது. அதனால் 1843- மார்ச் 17 - ல் அந்தப் பத்திரிக்கையிலிருந்து காரல் மார்க்ஸ் விலகினார்.

காரல் மார்க்ஸ் ஆரம்ப காலங்களில் கவிதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். அத்தகைய கவிதைகளில் ஒன்று;

“என்னைக் கட்டிய தலைகளை நொறுக்கி எழுந்தேன்
‘எங்கே செல்கிறாய்? என்க்கொரு உலகம் தேடி!
இங்கே அகன்ற பசும்புல் வெளிகளும்
கீழே கடல்களும் மேலே விண்மீன்களும் இல்லையா?
உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும்
என் இதயத்தில் அது வேரூன்ற வேண்டும்.
என் இரத்தத்தில் அது ஊற்றெடுக்க வேண்டும்
என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும்
நான் நெடுந்தூரம் ஊர்ந்து சென்றேன்
திரும்பினேன் கீழும் மேலும் உலகங்கள்
விண்மீன்களும் கதரவனும் துள்ளின
மின்னல் வெட்டியது நான் மடிந்தேன்”

‘தேடல்’ என்ற தலைப்பில் காரல்மார்க்ஸ் எழுதிய இந்தக் கவிதையை ஜென்னிக்குக் காணிக்கையாக்கினார்.

தன்னுடன் பயின்றவரும், தன்னைவிட மூன்று வயது மூத்தவரும், தன்னைவிட வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த வருமான ஜென்னியை மார்க்ஸ் மணந்து கொண்டார். மாணவப் பருவத்திலேயே ஒருவரை ஒருவர் விரும்பி, எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்திருந்தனர்.

காரல் மார்க்ஸ் தம்பதிக்கு ஜென்னி, எலியனோரா, லௌரா, பிரான்சிஆகா என்ற நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன.

அறிஞர்களுக்கெல்லாம் அறிஞராகத் திகழ்ந்த காரல் மார்க்ஸ், தமது ஓய்வு நேரத்தை தமது குழந்தைகளுடன் விளையாடுவதிலும், கொஞ்சி மகிழ்வதிலும் செலவிட்டார். அவர்களோடு விளையாடும்போது காரல் மார்க்ஸூம் குழந்தையாக மாறிவிடுவார்.

ஒருவர் வினாத் தொடுக்க, மற்றவர் அதற்குப் பதில் சொல்லும் ‘வினா - விடை’ என்ற விளையாட்டு காரல் மார்க்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த விளையாட்டை குழந்தைகள் ஆடிக் கொண்டிருந்த போது மார்க்ஸூம் அதில் கலந்து கொண்டார். அப்போது குழந்தைகள் காரல் மார்க்ஸிடம் கேட்ட வினாக்களும் அதற்கு அவர் சொன்ன விடைகளும்…

“உங்களுடைய மிக விருப்பமான சிறந்த குணம்?”
-எளிமை
“உங்களுக்கு பிரதான சிறப்பம்சம்?”
-உறுதியான நோக்கம்
“சந்தேகம் பற்றிய உங்கள் கருத்து?”
-போராடுவது
“அடிமை பற்றிய உங்கள் எண்ணம்?”
-அடங்கி நடத்தல்
“நீங்கள் மிகவும் வெறுக்கும் தீமை?”
- அடிமை புத்தி
“உங்களுக்கு விருப்பமான தொழில்?”
-புத்தகம் படித்தல்
“உங்களுக்கு விருப்பமான நிறம்?”
-சிவப்பு.

குழந்தைகள் காரல் மார்க்ஸை நேர்கண்டபோது அவர் சொல்லிய கருத்துக்கள் ஒரு புரட்சிக்காரரின் வாக்குமூலமாக அமைந்துவிட்டது.

1843 அக்டோபரில் மார்க்ஸ் பாரிசுக்குச் சென்றார். இங்குதான் மார்க்ஸின் சிந்தனைகளுக்குச் சரியான வாய்ப்புக் கிடைத்தது.

புறநகர்ப் பகுதிகளில் வாழக்கூடிய தொழிலாளர்கள், ஜெர்மன் கைவினைத் தொழிலாளர்கள், ஜெர்மன் கைவினைத் தொழிலாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், தத்துவவியலாளர்கள் ஆகியோரைச் சந்திப்பதிலும், அவர்களோடு விவாதிப்பதிலும் மார்க்ஸ் நேரத்தைச் செலவிட்டார்.

1844 பிப்ரவரியில் ‘ஜெர்மன் - பிரெஞ்சு ஆண்டு மலர்’ என்ற பத்திரிகையில் ‘யூதப் பிரச்சினையைப் பற்றி’ என்ற தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். தேசிய இனப் பிரச்சினையைப் பற்றி மார்க்ஸின் பார்வை இந்தக கட்டுரையில் வெளியிடப்பட்டது.

இடது சாரி ஹெகல்வாதியான புரூனோ பௌவரையின் கருத்துக்களுக்கு மார்க்ஸ் இந்தக் கட்டுரையில் பதில் கொடுத்திருந்தார்.

1842-ல் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்துக்குச் சென்றபோது மார்க்ஸைச் சந்தித்தார்

1844 ஆகஸ்டில் மீண்டும் எங்கெல்ஸ் - மார்க்ஸ் சந்திப்பு நடைபெற்றது. இருவரின் சிந்தனையும் ஒன்றுபட்டு இருந்ததால் கூட்டாகவும், தனியாகவும் சிந்தித்து பல்வேறு படைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பிரஸ் அரசாங்கத்தின் நிர்பந்தத்தால், பிரான்சிலிருந்து மார்க்ஸ் வெளியேற்றப்பட்டார். அதனால் 1845-ல் மார்க்ஸ் பிரஸ்ஸெல்சில் குடியேறினார்.

1847-ல் ஜூலை லண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. தொழிலாளர்களின் சங்கத்தைத் தீவிரமான முறையில் செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்குப்பின் இந்தத் தொழிலாளர்கள் சங்கம் ‘கம்யூனிஸ்டுகள் சங்கம்’ என்று அழைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில்தான் உலகத் தொழிலாளர்களுக்காக “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற புதிய கோஷத்தை மார்க்ஸூம், ஏங்கெல்ஸும் வழங்கினர்.

1848-ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் வர்க்கத்தின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது.

1848-ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் வர்க்கத்தின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது.

1848- பிப்ரவரியில் பிரான்சில் புரட்சி வெடித்தது. அதை கண்டு அஞ்சிய பெல்ஜிய அரசாங்கம் மார்க்ஸைக் கைது செய்து நாடு கடத்தியது.

பாரிஸ், லண்டன், ஜெர்மன், பிரஸ்ஸெல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள தொழிலாளரகள் அமைப்புகளை வழி நடத்துவதிலும், கம்யூனிஸ்டுகளை ஒன்றுபடுத்துவதிலும் மார்க்ஸூம், ஏங்கெல்ஸும் அயராது பாடுபட்டனர்.

தொழிலாளர்களின் அமைப்பு ரீதியான செயல்களில் ஈடுபடுவது; அந்ததந்த தேசத்தின் தொழிலாளர் நிலைகளையும் ஆளுவோரின் செயல்களையும் சேகரித்து, தொகுத்து தொழிலாளர்களின் பங்களிப்பு பற்றி எழுதுவது; தொழிலாளர் போராட்டங்களை ஊக்குவிப்பது; அவற்றிற்குத் தலைமை ஏற்பது என்று பல்வேறு வடிவங்களில் மார்க்ஸூம் தொடர்ந்து செயல்பட்டனர்.

தொழிலாளர் வர்க்கத்தின் ஒப்பற்ற நூலாகக் கருதப்படும் ‘மூலதனம்’ என்ற நூலின் முதல் பாகத்தை மார்க்ஸ் 1867- செப்டம்பரில் வெளியிட்டார். இந்தப் பணிகளில் ஏங்கெல்ஸ் மார்க்ஸூக்கு பேருதவி புரிந்தார்.

இந்த நூலை மார்க்ஸ் எழுதி கொண்டிருந்த போது அவரது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தது. ஒருவேளை ரொட்டித் துண்டுக்கும் கூட அந்தக் குடும்பம் அல்லல் பட வேண்டியது ஏற்பட்டது. மார்க்ஸின் குழந்தை பிரான்சிஸ்கா இறந்த போது சவப்பெட்டி வாங்கக்கூடக் காசில்லாமல் மார்க்ஸின் குடும்பம் அவதிப்பட்டது.

மார்க்ஸின் மனைவி ஜென்னிக்கு மார்பகத்தில் ஏற்பட்ட கட்டிக்கு மருந்து கூட வாங்கக் காசில்லாமல் தவித்தனர். மார்க்ஸ் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் ஏங்கெல்ஸின் உதவிதான் அவர்களுக்கு கை கொடுத்தது;

‘மூலதனம்’ மூன்று பாகங்கள் கொண்டதாகும். இந்த நூல்கள் இன்றும் சமுதாய மாற்றத்திற்குப் போராடும் வீரர்களின் கையேடாகவும், போர் வாளாகவும் திகழ்கிறது.

உலகம் முழுவதிலுள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வகையில், 1864-ல் செப்டம்பர் 28-ல் லண்டனில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு சிறப்பாக நடக்க, வழி காட்டினார் மார்க்ஸ். இந்த மாநாட்டிலதான் ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கம்’ நிறுவப்பட்டது. இதுதான் உலக அளவில் உருவான முதல் தொழிலாளர் சங்கம். இதன் தலைவராக மார்க்ஸ் செயல்பட்டார்.

1883-மார்ச் 14 -ம் தேதி காலையில் மார்க்ஸ் படுக்கையைவிட்டு எழுந்தார். படிப்பறைக்குள் நுழைந்தார்…. சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்… உட்கார்நபடியே மார்க்ஸ் மரணத்தை தழுவினார்.

மார்க்ஸின் மரணம் பற்றி, “நம் கட்சியின் மிகப்பெரும் அறிஞர் தம் சிந்தனையை நிறுத்திவிட்டார். நான்றிந்த அளவில் மிகவும் பலமான இதயம் தன் துடிப்பை நிறுத்திவிட்டது” என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்.

விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன்

மேலே எறிந்த பந்து மீண்டும் மேலே செல்லாமல் ஏன் பூமிக்கே திரும்பி வருகிறது?

மரத்திலிருக்கும் பழம் ஏன் பூமியை நோக்கிக் கீழே விழுகிறது? அந்தப் பழம் மரத்திலிருந்து அதற்கும் மேலே ஏன் செல்லவில்லை?

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் இறுதியில் பூமியை நோக்கி வருகின்றனவே ஏன்? இது போன்ற நிகழ்ச்சிகள் எதனால் நடக்கின்றன? என்று கூட எவரும் நினைத்தும் பார்த்ததில்லை.

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தமது அறிவுக் கூர்மையால் முயன்று விடை கண்டவர் சர் ஐசக் நியூட்டன் என்ற மேதை. இவர் கண்டுபிடித்து கூறிய பின் உலகம் வியந்தது. ‘ஒப்பற்ற அறிவுலக மேதை சர் ஐசக் நியூட்டன்’ என்று அவரைப் பாராட்டியது.

இங்கிலாந்தில் ‘உல்ஸ் த்ரோப்’ என்று ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊரில்தான் சர் ஐசக் நியூட்டன் பிறந்தார். இந்த ஊர் அவர் பிறந்ததனாலேயே வரலாற்றில் இடம் பெற்றது.

அறிவாளிகள் சோதனைகளோடுதான் பிறப்பார்கள்; அல்லது பிறந்தபின் வாழ்க்கை அவர்களுக்கு சோதனையாக அமையும். சோதனைகளையும், அதன் வழியாகக் கிடைக்கும் வேதனைகளையும் எதிர்த்துப போராடிக் கொண்டோ, அல்லது அவைகளை எல்லாம் துச்சமென மதித்தோ அவர்கள் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டே தான் வெற்றி என்னும் சிகரங்களை எட்டிப் பிடித்திருத்திருக்கிறார்கள��
� என்பதை பல மேதைகளின் வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. இது சர் ஐசக் நியூட்டனுக்கும் பொருந்தும்.

உலகம் பேரானந்தத்தோடு கொண்டாடும் கிறிஸ்துமஸ் அன்றுதான் நீயூட்டன் பிறந்தார். அவர் பிறந்த ஆண்டு 1642. மகன் பிறந்ததை நினைத்து அவரது தாய் மகிழ்ச்சி கொள்ளவில்லை.

ஏனெனில், நியூட்டன் பிறப்பதற்கு முன், அதுவும் இரண்டு மாதங்களுக்குப் முன்புதான் நியூட்டனின் தந்தை எதிர்பாராதவிதமாக மரணத்தைத் தழுவினார். இந்தச் சோகம் நியூட்டனின் தாயாரைப் பாதித்திருந்ததால், நியூட்டனின் பிறப்பு அவருக்கு வேதனையைத் தான் கொடுத்தது.

கணவன் இல்லாமல் காலமெல்லாம் வாழ நியூட்டனின் தாயார் விரும்பவில்லை. நியூட்டனுக்கு மூன்று வயது ஆகின்ற போது அவரது தாய் மறுமணம் செய்துகொண்டார்.

பிறப்பதற்கு முன்பே, தாய் இன்னொரு மனிதரிடம் அடைக்கலம்.. ஏது செய்வதென்பது கூட புரியாத பருவத்தில் இருந்த நியூட்டனை அவரது பாட்டிதான் பராமரித்தார். தந்தையின் பொறுப்பும், தாயின் பரிவும் இந்தப் பாட்டியிடமிருந்து தான் நியூட்டனுக்கு கிடைத்தது.

தாம் பிறந்த உல்ஸ்திரோப் என்ற கிராமத்தில்தான் ஆரம்பக் கல்வியை நியூட்டன் கற்றார்.

பள்ளிக் கல்வியை முடித்த பின்பு நியூட்டனுக்குக் கல்லூரி சென்று கணிதம் படிக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. ஆனால் வறுமையோடு போராடிக்கொண்டிருக்கும் நியூட்டனின் பாட்டியால், மேற்கொண்டு அவரைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இயலவில்லை.

ஏதாவதொரு வேலை தேடுவதே நல்லது என்ற முடிவுக்கு நியூட்டன் வந்தார். அதுவும் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. இறுதியில் நியூட்டனுக்கு ஒருவேலை கிடைத்தது. கிடைத்த வேலையிலும் விருப்பத்தோடு பணியாற்றினார். நியூட்டனுக்குக் கிடைத்த வேலை என்ன தெரியுமா?

ஒரு நிலப்பிரபுவின் ஆடுகளை மேய்ப்பதே அந்தப் பணி. அதிலும் நான்காண்டுகள் ஈடுபட்டார் படிக்க வேண்டிய பையன், ஆடு மேய்ப்பதை அறிந்து, நியூட்டனின் தாய்மாமன் கலங்கினார். அவரது முயற்சியால் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் நியூட்டன் சேர்க்கப்பட்டார். கணிதத்தில் பட்டம் பெற்றார்.

விடுமுறைக்கு தமது கிராமத்திற்கு வந்த நியூட்டன் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்தார் அப்போது ஒரு மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் ஒன்று கீழே விழுவதை நியூட்டன் கண்டார். இந்தக் காடசிதான் அவரை சிந்திக்க செய்தது. மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது, என்ற வினா அவர் உள்ளத்தில் உட்கார்ந்து கொண்டது….

எல்லாப் பொருட்களையும் தன் மையத்தை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டது பூமி என்பதை கண்டுபிடித்து பூமிக்கு ‘புவி ஈர்ப்பு சக்தி உண்டு’ என்பதை நியூட்டன் கண்டறிந்தார்.

பூமிக்குள்ள ஈர்ப்பு சக்தி, வானத்திலுள்ள கோள்கள், விண்மீன்கள் ஆகியவற்றிற்கும் உண்டு என்று நியூட்டன் கண்டுபிடித்தார். அந்த ஈர்ப்பு சக்திதான் கோள்களைச் சூரியனைச் சுற்றி வரும்படி செய்கின்றன என்று அறிந்ததும் நியூட்டன்தான்.

தமது இருபத்து ஆறாம் வயதில் தாம் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்த நியூட்டன், இந்தப் பணியில் முப்பத்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

ஒளியைப் பற்றிய ஆய்வில் நியூட்டன் இரவு பகலாக பாடுபட்டார்.

சூரியனின் ஒளியை வெண்மை நிறம் என்றுதான் இன்றும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சூரியனின் ஒளி வெண்மை அல்ல; அது ஏழு நிறங்களின் தொகுப்பு என்று நியூட்டன் கண்டுபிடித்தார்.

இந்த நிறங்களின் சுருக்கம்தான் ஆங்கிலத்தில் ‘விப்ஜியார்’ என்று குறிப்பிடப்படுகிறது..

நியூட்டனின் வட்டத் தகட்டைக் கொண்டு, சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களின் தொகுப்பைக் காணலாம்.
‘டெலஸ்கோப்’பை வடிவமைத்ததும் நியூட்டன்தான்.

நியூட்டனின் அறிவாற்றலையும், கண்டுபிடிப்புகளையும் கவுரவிக்கும் வகையில், இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக நியூட்டன் நியமிக்கப்பட்டார். நாணயச் சாலை பாதுகாப்பாளராகவும் அவர் பணி ஆற்றினார். ஆனால் அரசியலில் நியூட்டனின் அக்கறை செல்லவில்லை.

பூமியின் ஈர்ப்புத் தன்மையைக் கண்டுபிடித்த இந்த மேதையை, குடும்ப வாழ்க்கை ஈர்க்கவில்லை. அதனால் இறுதிவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தமது 85 ஆம் வயதில் நியூட்டன் இறந்தார்.

இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் நியூட்டன் கல்லறை இருக்கிறது. இங்குதான் இங்கிலாந்து நாட்டின் இளவரசியான டயானாவும் புதைக்கப்பட்டார்.

மேரி க்யூரி!

இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரிய பெண்மணி

நமக்கு ஏற்படும் பல நோய்களைக் கண்டறிந்து அவற்றைக் குணப்படுத்துவதற்கு உதவும் ‘ரேடியம்’ என்ற மாபெரும் விஷயத்தையே கண்டுபிடித்தவர் ஒரு பெண்!

பெயர் மேரி க்யூரி!

வாழ்வில் ஒரே ஒரு முறையாவது உலகின் சிறந்த விருதான நோபல் பரிசை வாங்கிவிட வேண்டுமென்று உலகம் முழுக்க பலர் வெறித்தனமாக ஏங்கிக் கொண்டிருக்கும் போது, தன் வாழ்வில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரிய பெண்மணி இவர். ஆனால் இந்தப் பெண் விஞ்ஞானி இந்தச் சாதனையை அடைவதற்காக தன் உடல் நலன், குழந்தைகள், காதல் என்று எத்தனை விஷயங்களை இழக்க வேண்டி வந்தது என்பதெல்லாம் ஒரு உருக்கமான சோகக் கதை!

போலந்து நாட்டின் வார்ஸா நகரில் வசித்த ஒரு ஆசிரியர் குடும்பம் அது...

மேரியின் அப்பா சீர்திருத்தப் பள்ளி உட்பட பல பள்ளிகளை நடத்தி வந்தார். குழந்தைகள் அத்தனை பேருக்கும் அவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். மேரியின் அம்மா பெண்கள் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியர்.

இவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில், மேரிதான் கடைக்குட்டி.

மேரிக்கு நான்கு வயதானபோது, அவளது சித்தப்பா அந்தக் குடும்பத்தோடு வந்து தங்க விரும்புவதாக ஒரு கடிதம் போட்டார். அந்தக் கடிதம் தான் மேரியின் இந்தச் சாதனைக்கே ஒரு ஆரம்பமாக அமைந்தது.

‘தாராளமாக வந்து தங்குங்கள்’ என்று அந்த சித்தப்பாவுக்கு பதில் கடிதம் எழுதியபோது மேரியின் குடும்பத்துக்கு அவரைப் பற்றிய ஒரு முக்கிய விஷயம் தெரியாது. கடுமையான காசநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த சித்தப்பா! இப்போது எய்ட்ஸ் மற்றும் சார்ஸ் போன்ற நோய்களைக் கண்டு நாம் பயன்படுவது போலவே அந்தக் காலத்தில் காசநோய்க்கு பயப்பட்டார்கள். பயந்தது போலவே மேரியின் அம்மாவுக்கும் அவரிடமிருந்து காசநோய் தொற்றிக் கொண்டது.

இந்த நோயின் காரணத்தால் போலந்தில் இருந்து அவ்வபோது தெற்கு பிரான்ஸில் இருந்த வெப்பப் பகுதிகளுக்கு சென்று நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டியநிலை மேரியின் அம்மாவுக்கு. சொந்த வீட்டிலேயே தனி அறையில் வாழவேண்டிய கட்டாயம் வேறு. ஒரே கூரையின்கீழ் இருந்தும் அம்மாவை பிரிந்து வாழ்ந்ததுதான் மேரி சந்தித்த முதல் சோகம்.

அதோடு தீரவில்லை... மேரிக்கு ஒன்பது வயதானபோது அவரது தாய் இறந்துவிட்டார். மனிதர்களின் நோயைத் தீர்க்கும் விதத்தில் தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அப்போதுதான் மேரியின் மனதில் ஒரு உறுதி ஏற்பட்டது.

மேரி மட்டுமல்ல... அவரது தாய்நாடான போலந்தும் ஒரு பெரிய சோதனையை அப்போது சந்தித்துக் கொண்டிருந்தது. தாய் நாட்டை கைப்பற்றிய ரஷ்யாவிற்கு எதிரான புரட்சியில் மேரியின் தாத்தா, அப்பா எனக் குடும்பமே பங்கேற்க, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டது.

நல்ல வேளையாக வாத்தியார் வீட்டுப் பிள்ளைகள் என்பதாலேயே மேரியோடு பிறந்தவர்கள் அனைவருமே, அவரவர் வகுப்புகளில் முதல் ரேங்க் எடுத்தார்கள். ஆனால் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், பள்ளி முடித்துவிட்டுக் கல்லூரியில் சேர்ந்து படிக்க பெண்களுக்கு எந்த வசதியும் அந்த ஊரில் இல்லை. அதிகபட்சம் பள்ளி இறுதி வகுப்பு முடித்துவிட்டு உள்ளூரில் ஒரு டீச்சராக வேலை செய்யலாம் என்கிற நிலைதான் பெண்களுக்கு! மேரிக்கு எப்படியும் மேற்கொண்டு படிக்க வேண்டும்... மனிதர்களின் நோயைத் தீர்க்கும் விதத்தில் ஏதாவது, புதிதாக கண்டு பிடித்து, மனித குலத்துக்கு உதவவேண்டும் என்ற துடிப்பு இருந்தது. தவிர, பள்ளி இறுதிப் படிப்பில் தங்கப்பதக்கமும் பெற்றிருந்தார் மேரி. முடிவாக மேரியும் அவளது அக்கா ப்ரோனியாவும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள். அதன்படி முதலில் மேரி ஒரு வீட்டில் வேலைக்குச் சேரவேண்டும். இந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு அவள் அக்கா, பாரீஸ் நகரில் தங்கி மருத்துவம் படிப்பார். அக்கா மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தவுடனே, தங்கை மேரியின் பட்டப்படிப்புக்கு அவர் பண உதவி செய்ய வேண்டும்!

இந்தத் திட்டத்தின்படி ஒரு வீட்டில் வேலை செய்து அந்தப் பணத்தை தன் அக்காவுக்கு அனுப்பி வந்தார் மேரி. கடமையோடு காதலும் வந்தது. அந்த வீட்டின் முதலாளியின் மகனும் மேரியும் ஒருவரையருவர் நேசிக்கத் தொடங்கினார்கள். ஆனால் இந்தக் காதல், கல்யாணத்தில் முடியவில்லை. காரணம் மேரி ஒரு பணக்காரி இல்லையே!

தனது முதல் காதல் இப்படி பொடிப்பொடியானதும் மேரி மனதளவில் உடைந்துவிட்டாள். இனி படிப்புதான் தனக்கு எல்லாமே என்று முடிவெடுத்தாள். சொன்ன வாக்குப்படியே அக்கா, தன் படிப்பு முடித்தவுடனே மேரி படிக்க உதவினாள். மேரியும் பாரிஸ் நகருக்குச் சென்று ஆறு வருடங்கள் கொண்ட பட்டப்படிப்பை படிக்க ஆரம்பித்தாள். அங்கும் கூட, கல்லூரியில் படித்த இரண்டாயிரம் பேரில் வெறும் இருபத்து மூன்று பேர்தான் பெண்கள்! அக்காவுக்குத் திருமணமான பின்பு ஒரு ஃப்ளாட்டில் தனியேதான் வசித்துக் கொண்டிருந்தார் மேரி.

அந்த நாட்களில்தான் துடிப்பான இளைஞனான பியரி க்யூரியைச் சந்தித்தாள் மேரி. ஏற்கெனவே பீலோ எலக்ட்ரிசிட்டியைக் கண்டுபிடித்தப் பெருமை அந்த இளைஞனுக்கு இருந்தது. இருவருமே அவரவர் காதலில் தோல்வியுற்று இருந்த நேரம் அது. ஒரே மாதிரி நிலை... தவிர இருவருக்குமே விஞ்ஞானத்தில் பெரும் விருப்பம். ‘நாம் கல்யாணம் செஞ்சுக்கலாமா?’ என்று கேட்டான் அந்த இளைஞன்.

கல்யாணம் என்றதுமே மேரிக்கு இயல்பான குடும்ப வாழ்க்கையால் தன் லட்சியம் பாதிக்கப்படுமே என்ற தயக்கம் வந்தது. ‘‘அதனால் என்ன? அடுத்தடுத்த ப்ளாட்களில் தனித்தனியாக வசிப்போம். மற்றபடி கணவன் மனைவியாக இருப்போம்’’ என்று சொன்னார் பியரி.

இவர்கள் கல்யாணம் செய்துகொள்வதில் வேறொரு சிக்கலும் இருந்தது. பியரி போலந்து நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. மேரி அவரைத் திருமணம் செய்துகொண்டால் மீண்டும் போலந்துக்குத் திரும்பி, அங்கேயே நிரந்தரமாகத் தங்கி மக்களுக்கு சேவை செய்வது என்பது முடியாத காரியமாகிவிடும். ஆனால் பியரியோ இதை ஒரு பிரச்னையாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ‘‘அதனாலென்ன... நான் போலந்துக்கு வருகிறேன். அங்கு உன்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறேன்’’ என்றார்.

தொடர்ந்து சில மாதங்களில் இருவருக்குமே ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து வாழ முடியாது என்று புரிந்து விட்டது. எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

காதலால் இணைந்த அந்த ஜோடி அடுத்த பதினான்கு வருடங்களும் கதிரியக்கப் பொருள்களைப் பற்றியே ஆராய்ச்சி செய்தார்கள். அதற்கு முந்தைய ஒரு வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியத்தைச் சுற்றியே அவர்களது பல ஆராய்ச்சிகளும் நடைபெற்றன. எப்போதுமே எந்தவொரு சாதனையிலுமே ஒரு ஆணை ஒத்துக்கொள்ளும் அளவுக்கு சிலர் பெண்களை ஒத்துக் கொள்வதில்லை. மேரியின் ஆராய்ச்சி விஷயத்திலும் இது நடந்தது. எல்லாமே கணவர் பியரியின் ஐடியாக்கள்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்கள் வாய் அடைபடும்படி, தான் அவ்வப்போது எழுதி வைத்திருந்த பல விஞ்ஞானக் குறிப்புகள் அடங்கிய நோட்டுப் புத்தகம் ஒன்றை வெளியிட்டார் மேரி க்யூரி.

அணுக்கள் உள்ளன என்பதையே கி.பி.1900 வரை எல்லா விஞ்ஞானிகளும் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அணுக்களுக்குள்ளே நடைபெறும் கதிரியக்கம் குறித்து மேரி சொன்னபோது சக விஞ்ஞானிகள் அதை வெறும் கேலியாகவே பார்த்தார்கள். ஏற்கவும் மறுத்தனர். ஆனால் கடைசியில் மேரி க்யூரியின் முடிவுதான் சரியானது என்று உறுதிப்படுத்தப்பட்டது.

தோரியம் என்ற கதிரியக்க இயல்பு கொண்ட பொருளைக் கண்டுபிடித்தார் மேரி.

கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து வேறொரு பெரிய ரகசியத்தையும் கண்டுபிடித்தார்கள். என்ன அது? கதிரியக்கம் என்பது ரசாயனப் பொருள்கள் ஒன்றோடொன்று இணைவதினால் ஏற்படுவது அல்ல என்பதையும், குறிப்பிட்ட பொருளின் (அதாவது அணுவின்) இயல்பைக் கொடுப்பது கதிரியக்கம்தான் என்பதையும் கண்டுபிடித்தனர். ஆக ரேடியம் என்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்தது மேரிதான்.

இத்தனைக்கும் தம்பதியர் இருவரும் சோதனைகள் செய்த பரிசோதனைச் சாலை மிகவும் சிறியது. ‘அட... ஏதோ உருளைக் கிழங்கு கிடங்கு மாதிரி இருக்கிறது. இதிலா பரிசோதனை செய்கிறார்கள்!’ என்று கேலி செய்தார்கள் மற்றவர்கள். ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை இந்த தம்பதியர்.

மனைவி மேரி செய்த இந்தப் பரிசோதனையின் ஒரு பகுதியாக ரேடியத்தை தன் தோலின் மீதே ஊற்றிக் கொண்டார் கணவர் பியரி. இதனால் அவர் கையில் கட்டி ஏற்பட்டது. அப்படி செய்த ஆராய்ச்சியின் மூலமாக ‘தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத கட்டிகளுக்கு’ சிகிச்சை செய்ய ரேடியத்தை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்தார் மேரி. ‘கியூரி தெரபி’ என்றே இதற்குப் பெயரிட்டார்கள் இந்தத் தம்பதியர்.

அணுவின் மர்மங்களை மேலும் அறிய கணவரும் மனைவியும் முயற்சித்தார்கள். இதன் விளைவாக ‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’ என்ற புதிய கோட்பாடு உருவானது. அறிவியலின் மிகப்பெரிய திருப்புமுனை இது.

அந்த வருடம் தான் மேரி தம்பதிக்கு ஒரு அதிர்ஷ்ட வருடம்! இந்தக் கண்டு பிடிப்புக்காக உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு கணவன்_மனைவி என இருவருக்குமே கிடைத்தது!... விருது கிடைத்த பின்பு தங்கள் மோசமான உடல்நிலை பற்றி சுத்தமாக மறந்து விட்டு, இன்னும் அதிக ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள் இந்தத் தம்பதியர்.

ஆனால், யுரேனியம் போன்ற பொருள்களில் இருந்து ரேடியத்தைப் பிரித்தெடுப்பது பெரும் சவாலாக இருந்தது. டன் கணக்கான பாறைகளிலிருந்து பத்தில் ஒரு பங்கு ரேடியத்தைத் தயாரிக்கவே மேரிக்கு பல ஆண்டுகள் பிடித்தன.

உலகமே ரேடியத்தின் அற்புத சக்தியைப் பாராட்டியது. இந்தப் பாராட்டிலும், தன் லட்சியத்தை நிறைவேற்றும் மகிழ்ச்சியிலும் மேரி, தன்னுடைய உடலின் ஆரோக்கியக் குறைவை வெளிப்படுத்திக் கொள்ளாமலே இருந்துவிட்டார்.

கதிரியக்க சாம்பிள்களைத் தொடர்ந்து கையாண்டதால் அந்த தம்பதியர் விரல்களின் நுனி கறுத்து இறுகிப் போனது. உடல் இளைத்தது. மகள் ஐரனே பிறந்த பிறகு உருவான அடுத்த குழந்தையும் குறைப்பிரசவத்தில் இறந்து போனது. இந்தக் குடும்பக் கவலைகள், அவர்கள் நோபல் பரிசு பெற்ற சந்தோஷத்தையே மழுங்கடித்தது. கதிரியக்கத்தால் உடல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளால் நோபல் பரிசைக்கூட நேரில் சென்று வாங்க முடியவில்லை இவர்களால்!

அந்தப் பரிசுத் தொகையைக் கொண்டு டாய்லெட் இணைக்கப்பட்ட வீடு ஒன்றை வாங்கினார்கள் இந்தத் தம்பதியர். பிரான்சில் பெரும் பணக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த வசதி அப்போது உண்டு.

இந்தத் தம்பதிக்கு பொதுமக்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்ததன் காரணமாக, பிரான்ஸ் அரசு இவர்களின் கதிரியக்க ஆராய்ச்சிகளுக்காக நிதி உதவியும்கூட செய்தது.

கணவர் பியரியின் உடல்நிலையோ வேகமாக சீரழிந்துக் கொண்டிருந்தது. மேரியாலும் முழுமையாக ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியவில்லை. இரண்டாவதாகப் பிறந்த ஈவா என்ற மகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் வேறு சேர்ந்து கொண்டது. ஒரு மழைக்கால மதியத்தில் தனியே வெளியே நடந்துக் கொண்டிருந்த பியரியின் பார்வை திடீரென மோசமடைய, எதிரில் வந்த குதிரை வண்டியின் முன் விழுந்தார். குதிரையும், வண்டியும் அவர் மேல் ஏற, உடனடியாக இறந்துவிட்டார்.

மேரியால் இந்தத் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. இறந்தது அன்பான கணவன் மட்டுமல்ல, ஆராய்ச்சியிலும் கூடவே வந்த துணையும் ஆயிற்றே! பியரி பணிபுரிந்த இடத்தில் மேரியைப் பேராசிரியராக பணிபுரிய அனுமதித்தது பிரான்ஸ் பல்கலைக் கழகம். பிரான்ஸ் நாட்டில் இப்படியரு உயர் பதவியை வகித்த முதல் பெண்மணியே மேரிதான்!

சிறிது நாட்களிலேயே குடும்பத்தை நிர்வகித்து வந்த மாமனாரும் (பியரியின் அப்பா) இறந்தவுடன் வீட்டில் குழந்தைகள் மேலும் இடிந்துபோனார்கள். இதற்கு நடுவே மேரியின் வாழ்க்கையை மாற்றிய இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு ஆதரவு தேவைப்பட்ட மேரியின் மனதுக்கு இதம் தந்தது பால் என்பவரது பேச்சு. இவர் நான்கு குழந்தைகளுக்கு தந்தை என்றாலும் மனைவிக்கும் அவருக்கும் கடும் கருத்துவேறுபாடுகள். இந்த நிலையில்தான் பாலும் மேரியும் காதல் வசப்பட்டார்கள். ‘‘நீங்கள் உங்கள் மனைவியிடமிருந்து, முழுதாக பிரிந்துவிடுவதுதான் நமது இணைப்பிற்கான முதல் படியாக இருக்கும்’’ என்று ஒரு கடிதத்தை அனுப்பினார் மேரி.

ஆனால், மேரியின் போதாத காலம், இந்தக் கடிதம் பாலின் மனைவி ஜினியிடமே கிடைத்துவிட்டது. ஜினியின் அண்ணன் ஒரு நாளிதழின் ஆசிரியர். மேரியின் புகழைக் கெடுக்கும் வகையில், அந்தக் கடிதத்தின் சில பகுதிகளைத் தன் தினசரி பேப்பரில் பிரசுரம் செய்தார் அவர். ஏற்கெனவே, மேரி தங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல... ஆனாலும் இவ்வளவு புகழ் பெறுகிறாளே என்று மேரியைக் குத்திக் கிளற சமயம் பார்த்துக் கொண்டிருந்த சிலருக்கு இது பெரிய வாய்ப்பாகப் போய்விட்டது. இந்த விஷயத்தையே சாக்காக வைத்து அவரை அவமானப்படுத்தி, எப்படியாவது அவரை பிரான்சிலிருந்து வெளியேற்றத் துடித்தார்கள். மேரியின் பரிசோதனைச் சாலையைச் சுற்றி வந்து கலாட்டா செய்தார்கள்.

‘‘என் அறிவியல் பணிகளையும் அந்தரங்க வாழ்க்கையையும் இணைத்துப் பேசுவது சரியல்ல. என் வாழ்க்கைத் தொடர்பான வதந்திகளின் நிழலை எனது ஆராய்ச்சிகளின் மீது படிய விடுவது அனாவசியம்’’ என்று சொன்னார் மேரி. ஆனால் மேரிக்கு எதிரான கலவரங்கள் மேலும் மேலும் அதிகமாகத்தான் ஆயின.

இந்தக் காலகட்டத்தில், ரேடியம் மற்றும் பொலானியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததற்காக மேரிக்கு மீண்டும் ஒருமுறை நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேரிக்கு எதிர்ப்புகள் மிக அதிகமாக இருக்கவே ‘விருது பெறும் நிகழ்ச்சிக்குக் கூட நீங்கள் நேரடியாக வரவேண்டியது கட்டாயமல்ல’ என்றார்கள் நோபல் குழுவினர். ஆனால் மனத்துணிவுடன் நேரில் சென்றே பரிசைப் பெற்றுக்கொண்டார் மேரி.

தொடர்ந்து செய்து வந்த ஆராய்ச்சிகளால் தன் இரண்டு பெண்களுக்கும் இளம் வயதில் போதிய கவனிப்பை மேரியால் கொடுக்க முடியாமல் போனது. ஆனால் வளர வளர தாயும் மகள்களும் மிகவும் பாசத்துடன் ஒன்றுபட்டார்கள். இசையில் ஆர்வம் கொண்ட ஈவா, வீட்டிலேயே இருந்து கொண்டு நிர்வகிக்க, மேரியும் அவரது மூத்த மகள் ஐரனேவுமாக குண்டு காயம் பட்ட இராணுவ வீரர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கத் தொடங்கினார்கள்.

இதற்காக பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள முந்நூறு மருத்துவ மனைகளுக்குச் சென்று வந்தார்கள். உடலுக்குள் குண்டு தங்கிய இடத்தை எப்படிக் கண்டறிவது என்பது குறித்து ராணுவ டாக்டர்களுக்குப் பயிற்சி அளித்தார்கள்.

ஐரனேவுக்கு இருபத்தெட்டு வயதானபோது அவருக்குத் திருமணம் நடந்தது. கணவர் ஜீவியெட்டும் ஒரு விஞ்ஞானியே என்பதுதான் சிறப்பம்சம்! இந்தக் கணவன் மனைவி இணைந்து செயற்கைக் கதிரியக்கத்தை கண்டுபிடித்தார்கள். இதற்காக இந்தத் தம்பதிக்கும் நோபல் பரிசு வழக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிரான்ஸ் நாட்டின், அணுசக்தி திட்டத்தின் சிற்பியாகவே ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார் ஜீவியெட். ஆக கணவன், மனைவி, மகள், மருமகன் என நால்வருமே நோபல் பரிசு பெற்று பெரும் சாதனையைப் படைத்தார்கள்!

‘ரேடியம் இன்ஸ்டிடியூட்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார் மேரி. ஆனால், கதிரியக்கம் தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளின் காரணமாக, மேரிக்கு கண்களில் கேடராக்ட், காதில் எப்போதும் ஒலி, தோலில் மாற்றம் போன்ற பல பாதிப்புகள் இருந்து கொண்டேயிருந்தன. ஆனால் மேரி அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தன்னால் மனிதகுல முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்ய முடியுமா என்பதில்தான் அவரது கவனம் இருந்தது. ஓய்வில்லாமல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மேரி க்யூரி, கடைசியில் புற்று நோயால் இறந்தார். அவரது சாம்பல் பாந்தியாம் என்ற கவுரவமிக்க இடத்தில் இன்னும்கூட வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ [Galileo] (1564-1642)


விசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ!

1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார்! அவர் செய்த குற்றம், மதத் துரோகம்! போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy 's Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம்! காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம்! அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார்! ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார்! அந்தக் காலத்தில் எழுந்த புது விஞ்ஞானக் கருத்துக்களை ரோமாபுரி மடாதிபதிகள் புறக்கணித்து, விஞ்ஞான மேதைகளைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்தது, உலக வரலாற்றில் வருந்தத் தக்க, அழிக்க முடியாத கறையாகும்!

‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue on the Two Chief World Systems] என்ற காலிலியோவின் நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி ரோமாபுரி மடாதிபதிகள் கட்டளை யிட்டனர்! காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது! ஆனால் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் ‘ என்னும் முதுமொழிக் கேற்ப, கால வெள்ளத்தில் காபர்னிகஸின் மெய்யான பரிதி மைய நியதியை எவரும் தடைபோட்டு நிறுத்த முடியவில்லை!

விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்த விஞ்ஞானி!

‘கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன் ‘ என்று இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ இறுதியில் ஆனந்தப் படுகிறார்! ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார்! பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை ‘ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ!

ஊசல் ஆட்டத்தில் [Pendulum Swing] ஓர் ஒழுங்கைக் கண்டு பிடித்துக் கடிகார நகர்ச்சிக்கு முதலில் அடிகோலியவர், காலிலியோ! உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார்! கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!

காலிலியோவின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

காலிலியோ காலிலி [Galileo Galilei] 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் பைஸா [Pisa] நகர்க்கருகில் ஓரிடத்தில் பிறந்தார்! தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks]! 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார்! தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார்! அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது! 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார்! ஊஞ்சல் வீச்சின் அகற்சி [Width] கூடினாலும், குறைந்தாலும் ஊசல் வீச்சின் காலம் மாறாமல் ஒரே எண்ணிக்கையில் இருந்தது!

அரிஸ்டாடிலின் [Aristotle] வேதாந்தம் படித்தார். கணிதம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டு, பட்டம் பெறாமலே பல்கலைக் கழகத்தை விட்டு 1585 இல் வெளியேறினார்! கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார்! அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார்! 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர்! அடுத்து இருபது ஆண்டுகள் காலிலியோ ‘அண்டங்களின் நகர்ச்சியைப் ‘ [Motion of Bodies] பற்றி ஆய்வுகள் செய்தார்.

1589 இல் காலிலியோ பைஸா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1590 இல் காலிலியோ ‘நகர்ச்சியைப் ‘ பற்றிய [On Motion] தனது முன்னோட்டக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டார். 1591 இல் அவரது தந்தை காலமாகி, பெருத்த பணமுடை ஏற்பட்டது! ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார்! ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது! அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது! காலிலியோவின் அன்பர்கள் பாடுவா பல்கலைக் கழகத்தில் [University of Padua] கணிதப் பேராசிரியர் பதவியை அளித்தார்கள். 1592 முதல் 1610 வரை காலிலியோ பதினெட்டு ஆண்டுகள் அங்கே கல்வி புகட்டினார்.

பல்கலைக் கழகச் சம்பளப் பணம் போதாமல் காலிலியோ, தன் இல்லத்தில் செல்வந்த மாணவரை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவருக்குத் தனிக்கல்வி புகட்டியும் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று! அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று! காலிலியோவுக்கு இரு பெண்டிரும் ஓர் ஆணும் பிறந்தனர். ஏழ்மை நெருக்கத்திலும் காலிலியோ தனது ‘நகர்ச்சி ‘ [On Motion] கணிதப் படைப்புகளைத் தடையின்றி வளர்த்துக் கொண்டு வந்தார்!

1612 இல் நீரழுத்தவியல் [Hydrostatics] துறையை விருத்தி செய்யும் போது, காலிலியோ அரிஸ்டாடிலைத் தாக்கி ஆர்க்கிமீடியஸைத் தூக்கிப் பேசினார்! அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார்! அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது! எட்டாண்டுகள் காலிலியோ ஆணைக்கு அடங்கி வெளிப்படையாக எதுவும் சொல்லாது, ஆனால் மனத்துக்குள் ஆதரித்து வானியலையும், யந்திரவியலையும் [Astronomy, Mechanics] தொடர்ந்தார்.

‘பூமைய அமைப்பையும் ‘ [Geo-centric System] அதற்கு எதிரான ‘பரிதி மைய அமைப்பையும் ‘ [Sun-centric System] கண்ணோட்ட மின்றி [Impartial Way] எடுத்து விளக்க, 1624 இல் போப்பாண்டவரிடம் [Pope Urban VIII] அனுமதி பெற்றார்! அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது! ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை! தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார்! மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது! உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது! காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார்! விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது! சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று! ‘ஆயினும் பூமிதான் சுற்றுகிறது ‘ என்று காலிலியோ வாயுக்குள் முணுமுணுத்தாகக் கூறப் படுகிறது!

1614 ஆம் ஆண்டு பிளாரென்ஸ் பாதிரி ஒருவர், ‘பூமி நகர்கிறது, பூமி சுற்றுகிறது என்று காலிலியோக் கூட்டம் புலம்புவது மதத் துரோகம் ‘ என்று அனைவரையும் தூற்றினார்! அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார்! பைபிளில் எங்கெங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்கு முரணான கூற்றுகள் உள்ளன என்று அக்கடிதத்தில் எடுத்துக் காட்டி, அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது பைபிளில் உள்ள முரண்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ரோமன் காதிலிக் நம்பிக்கையை எந்த விஞ்ஞான மெய்ப்பாடுக்கும் மேற்கோளாக வாதிக்கக் கூடாது என்றும் சுடச் சுடப் பதில் கொடுத்தார்!

காலிலியோ கண்டுபிடித்த கருவிகள், விஞ்ஞான விந்தைகள்

விஞ்ஞான உலகில் பெளதிக [Physics] யுகத்தின் வாசற் கதவை முதன் முதல் திறந்து வைத்தவர் காலிலியோ! அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ! துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும்! ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே! காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீன்களின் தூதர் ‘ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது

பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட எடைக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காலிலியோ காட்டினார்! அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்! காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion]! மற்றது செங்குத்தில் போகும் வேகம் [Vertical Motion (Acceleration or Deceleration) due to Gravity]! கணை மேல்நோக்கிச் செல்லும் போது, செங்குத்து வேகம் தளர்கிறது! கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது! அவரது சோதனை மூலம் விளைந்த ‘விழும் அண்டங்களின் விதி ‘ [Law of Falling Bodies], ஸர் ஐஸக் நியூட்டன் ‘நகர்ச்சி விதிகளைப் ‘ [Newton 's Laws of Motion] படைக்க வழி காட்டியது!

அடுத்து காலிலியோ ஒப்பியல் வேகத்தைப் [Relative Velocity] பற்றி விளக்கினார்! ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார்! ஆனால் காலிலியோ அதை மறுத்துக் கூறி, ‘பூமியின் நகர்ச்சியில் பிரிபடும் மட்ட வேகம் [Horizontal Component of Earth 's Motion], பூமியோடு ஒட்டாத மேகம், பறவைகள் அனைத்தையும் எப்போதும் தன்னோடு இழுத்துச் செல்லும் ‘ என்று விளக்கினார்!

1609 இல் ஹாலந்தில் ‘உளவு நோக்கி ‘ [Spyglass] ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதைக் காலிலியோ கேள்விப் பட்டார். முதன் முதலாக 20 மடங்கு உருப்பெருக்கம் [Magnification] கொண்ட தொலை நோக்கியைத் தன் கையாலே ஆடிகளைத் தேய்த்துத் தயாரித்தார்! அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது! காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார்! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார்! 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார்! அதுபோல் புதன் கோளின் பிறைகளையும் கண்டார். இத்தாலிய வேதாந்தப் பேராசிரியர்கள் பிறை வெள்ளி இருப்பதை நம்பாமல் காலிலியோவைத் திட்டி, அரிஸ்டாடில் கூற்றுப்படி முழுக் கோளங்களைத் தவிர குறைக் கோள்கள் விண்வெளியில் இருக்க முடியாதென வாதித்தார்கள்!

விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தான் கண்ட, வான அற்புதங்கள் யாவற்றையும் ‘விண்மீன் தூதன் ‘ [The Starry Messenger] என்னும் தனது அரிய நூலில் வெளியிட்டுள்ளார்! 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன! சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார்! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார்! பிறகு 230 ஆண்டுகள் தாண்டி நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

1641 இல் காலிலியோவின் மகன் வின்சென்ஸியோ [Vincenzio] தந்தையின் ஊஞ்சல் கடிகார டிசைனை வரைந்து அதன் முதல் வடிவத்தை உருவாக்கினார். அடுத்து 1655 இல் டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜன் அதற்கு முழு வடிவத்தைக் கொடுத்து, ஊசல் கடிகாரத்தை ஆக்கினார்! 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி! 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு! வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார்! அடுத்து கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] நிலவின் போக்கால் ஏற்படுகின்றன என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை!

திருமணம் ஆகாமல் 1600 இல் தனக்குப் பிறந்த மூத்த புதல்வி வெர்ஜீனியாவைப் [Viginia Galilei] பதிமூன்றாம் வயதில் காலிலியோ, பிளாரென்ஸ் நகருக்கு அருகே இருந்த கிறிஸ்துவக் கன்னிமாடத்தில் [Christian Convent] கன்னியாக விட்டுவிட நேர்ந்தது! வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது! தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா! உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள்! காலிலியோ தான் கண்ட விஞ்ஞான விந்தைகளைத் தன் புதல்வியிடம் கூறி யிருப்பதைக் கன்னிமாடத்திலிருந்து தந்தைக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதங்களில் காணலாம்!

அவள் 21 ஆண்டுகளாகக் காலிலியோவுக்கு 124 கடிதங்கள் எழுதி யிருக்கிறாள்! அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது! ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது! புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளி ‘தேவா ஸோபெல் ‘ [Dava Sobel] எழுதிய ‘காலிலியோவின் புதல்வி ‘ [Galileo 's Daughter (1999)] என்னும் அற்புதப் புத்தகம் காலிலியோவின் வரலாற்றை அழகாகக் காட்டுகிறது!

மெய்யான பிரபஞ்ச அமைப்பை பறைசாற்றிய குற்றத்திற்கு காலிலியோ ஒன்பது ஆண்டுகள் இல்லச் சிறைவாச தண்டனையை அனுபவித்தார்! 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது! அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர்! அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது! அந்நூல் இத்தாலியை விட்டு ஹாலந்துக்கு மறைவாகக் கடத்தப் பட்டு, 1638 இல் அச்சாகி வெளியானது!

சிறையில் காலிலியோ தனது 74 ஆம் வயதில் கண்கள் குருடாகிப் போனாலும், தொடர்ந்து ஊஞ்சல் கடிகாரத்தை டிசைன் செய்தார். அதுவே அவரது இறுதியான படைப்பு! 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகின் முதல் பெளதிக விஞ்ஞானியாகக் கருதப் பட்ட காலிலியோ மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார்!

340 ஆண்டுகளுக்குப் பிறகு 1979 இல் இரண்டாம் போபாண்டவர் ஜான் பால் [Pope John Paul II] மதவாதிகள், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரைத் தூண்டிக் காலிலியோவிற்கு நீதி மன்றம் அளித்த தண்டனை ஏற்றதா என்று மறுபடியும் ஆராய ஆணையிட்டார்! 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன! கிறிஸ்துவ விஞ்ஞான நிறுவனம் [Pontifical Academy of Science] 1992 இல் வெளிப்படையாகப் ‘பரிதி மைய நியதிக்கு ‘ ஒப்புதல் தெரிவித்து, இரண்டாம் போப்பாண்டவர் ஜான் பால் மூலம் மாமேதை காலிலியோவைச் சிறையிட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது!

‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா ‘ என்று போற்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அவரது முன்னோடி ஐஸக் நியூட்டன் ஆகியோர் இருவருக்கும் விஞ்ஞான குருவாய், காலிலியோ விளங்குகிறார்! நியூட்டனின் பூர்வீக யந்திரவியல் [Classical Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravitation], ஆகிய பெளதிகப் படைப்புக் களுக்கு அடிப்படைக் கணித ஆக்கங்களை, அளித்தவர் காலிலியோ ஒருவரே!

1971 இல் அபொல்லோ விண்சிமிழில் [Apollo-15 Spacecraft] பறந்து, சூன்ய மண்டலமான சந்திரனில் நடந்த டேவிட் ஸ்காட் [David Scott] பறவையின் சிறகையும், இரும்பு சுத்தியலையும் மேலிருந்து கீழே விழவிட்டார்! இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார்! நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது! அது 1995 இல் வியாழனை நெருங்கிக் காலிலியோ தொலை நோக்கியில் 385 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட, அதன் துணைக் கோள்களைப் [Jupiter 's Satellites] படமெடுத்தது!